பெங்களூருவின் நாகவரா பகுதியில் மெட்ரோ ரெயில் பணி நடந்து வருகிறது. கல்யாண் நகரில் இருந்து எச்.ஆர்.பி.ஆர். பகுதி வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் மேம்பாலத்துக்காக தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகவரா பகுதியில் இன்று காலை 11 மணி அளவில் மெட்ரோ ரெயில் பாதைக்கான தூண் ஒன்று இடிந்து சாலையில் விழுந்தது. அப்போது சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 3 பேர் மீது இடிபாடு விழுந்தது. இதில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். படுகாயம் அடைந்த கணவன்-மனைவி, அவர்களது 2 வயது மகன் ஆகிய 3 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி தாய்-2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர். தூண் இடிந்து விழுந்ததில் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர். விபத்து நடந்த பகுதியில் வாகன போக்குவரத்தை நிறுத்தினர். சாலையில் கிடந்த இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
