கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாகவே வெறிநாய் தொந்தரவு அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் வானுவர் பிள்ளையார் கோவில் தென் வடல் தெருவை சேர்ந்த பகத்சிங் மகள் உத்ரா நேற்று காலை மெயின் பஜாரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளிக்கு தன்னுடைய பாட்டி செல்லம்மாளுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வெறிநாய் ஒன்று குழந்தையின் கையை கடித்தது. அப்போது பாட்டி தன் கையில் இருந்த புத்தகப் பையை வைத்து நாயை அடித்து விரட்டினார். பின்னர் மாணவி உத்ராவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவசர பிரிவில் சேர்த்தனர்.
இந்நிலையில் அதே நாய் கடையநல்லூர் மக்கா நகர் ரஹ்மானியாபுரம் முத்துகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவி பர்வீன்பானு, முத்துமாரி, கனகவல்லி, முருகேஷ், ஈஸ்வரி, சந்திரா, தவசிராஜா, கண்ணன், மூக்கம்மாள், பஷீர், சங்கரலிங்கம், செல்லம்மாள், எஹியா, சுமையா பானு, செல்லம்மாள், அப்துல் மஜீத், உதுமான் மைதீன், முஸ்தபா, சிவா, முபாரக், அல்பியா, சேக் மீரான், சிந்தாமதார் , கார்த்திகைலட்சுமி உட்பட 27 நபர்களை கடித்தது.
இதில் நேற்று இரவே 13 நபர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 14 நபர்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் கடையநல்லூர் நியூ பஜார் அருகே அந்த நாயை நகராட்சி ஊழியர்கள் வலை விரித்து பிடித்து தடுப்பூசி போட்டு தென்காசியில் உள்ள நாய்கள் பராமரிப்பு காப்பகத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் மற்றொரு நாய் போக நல்லூர் மாவடிக்கால் பகுதிகளில் இன்று காலை எட்டு பேரை கடித்துள்ளது. அவர்கள் அனைவரும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
