ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து கல்புதூர் பகுதி வரை செல்லக்கூடிய அரசு பேருந்து, முத்துக்கடை ஆட்டோ நகர் வழியாக சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பேருந்தின் இடதுபக்க பின்புற சக்கரமானது திடீரென கழன்று சாலையில் ஓடியதாக கூறப்படுகிறது.
இதனை கண்ட பயணிகள் பெரும் அச்சமடைந்து கூச்சலிட்டுள்ளனர். இதைக் கண்டு சுதாரித்து கொண்ட பேருந்து ஓட்டுநர், சாதூர்யமாக பேருந்தை சாலையின் ஓரம் நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, வேறு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

