விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் திருபுகழ் தெருவினை சேர்ந்த மனோஜ் குமார் என்ற 24 வயது இளைஞர் விழுப்புரத்தில் உள்ள தனியார் துணிக்கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மூன்று நாட்களாக வயிற்று போக்கு இருந்த நிலையில், இரவு அளவுக்கு அதிகமாக நூடுல்ஸ்சை விரும்பி உட்கொண்டுள்ளார். இதனால் இரவு மூச்சு திணறல் ஏற்படவே அருகிலுள்ள விழுப்புரம் தலைமை மருத்துவமனையான முண்டியம்பாக்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து இளைஞரின் உடலை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்தபோது இளைஞர் மூன்று தினங்களாக வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் வயிறு முட்டும் அளவிற்கு நூடுல்சை சாப்பிட்டதால் செரிமானம் ஆகாமல் இளைஞர் உயிரிழந்தது தெரிவந்துள்ளது. மூச்சு முட்டும் அளவிற்கு இளைஞர் நூடுல்சை உட்கொண்டு செரிமானம் ஆகாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.*