திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள திருநாராயணபுரம் மேட்டாங்காடு பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் பெரியசாமி (19). இவர் மரம் ஏறும் தொழிலாளி. ஏலூர் பட்டியில் விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோட்டத்தில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு தென்னை மரத்தில் இருந்து கால் தவறி கீழே விழுந்ததில் பெரியசாமி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த நான்கு நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அவரது தாயார் முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

