அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த செங்கராயன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் அனுசியா (வயது 23) இவர் சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். அதேப்போல புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்துள்ள மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் சிங்கப்பூரில் பணி செய்து வருகிறார். அனுசியாவுக்கும், குமரேசனுக்கும் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் நேரில் சந்தித்துள்ளனர். பின்னர் இளைஞரின் சொந்த ஊரான மாங்குடி கிராமத்திற்கு சென்ற காதல் ஜோடியை குமரேசனின் பெற்றோர் ஏற்க மறுத்து திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து குமரேசனும் – அனுசுயாவும் திருச்சி தனியார் விடுதியிலேயே சில நாட்கள் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த குமரேசனின் பெற்றோர், அனுசுயாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். செங்கராயன் கட்டளை கிராமத்திலிருந்து திருச்சி சென்ற அனுசுயாவின் உறவினர்கள், அவரை சொந்த
ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். மேலும் அனுசுயாவை கண்டித்து அவரது செல்போனையும் வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் அனுசுயாவை, சின்ன பட்டாக்காடு கிராமத்தில் உள்ள தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் இல்லத்தில் கடந்த 10 நாட்களாக தங்க வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சின்ன பட்டாக்காடு கிராமத்தில் இருந்தபடியே அனுசியா, இந்த தகவலை தனது காதலனுக்கு அலைபேசி மூலம் ரகசியமாக தெரிவித்துள்ளார். இன்று வாடகை கார் மூலம் அரியலூர் மாவட்டம் சின்ன பட்டாக்காடு கிராமத்திற்கு தனது நண்பர்களுடன் வந்திருக்கிறார் அவரது காதலன் குமரேசன். தெருமுனையில் காரை நிறுத்திய குமரேசன் தனது நண்பர்கள் மூவரை அனுப்பி, அனுசுயா தங்கி இருக்கும் வீட்டில் திருமண அழைப்பிதழ் கொடுப்பதுபோல் கையில் மஞ்சள் பை ஒன்றை பிடித்த படியே நடந்து சென்றுள்ளனர்.
குமரேசன் காருக்குள்ளேயே அமர்ந்திருந்திருக்கிறார். அவரது நண்பர்கள் சட்டை மற்றும் பேண்ட்டுக்குள் கத்திகளையும் மறைத்து எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. தனது அக்கா மகள் மித்ராவுடன் விளையாடிக் கொண்டிருந்த அனுசியா, காதலனின் நண்பர்களை கண்டதும் காரில் ஏறி தப்பிச் செல்ல முயன்றிருக்கிறார். அனுசியாவின் சகோதரி வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாத சூழலில், இதனைக் கண்ட ஐஸ்வர்யா சத்தம் போட்டு கத்தி, கூச்சல் எழுப்பியுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வருவதற்குள் அனுசியாவை காருக்குள் அழைத்துச் சென்றிருக்கின்றனர் குமரேசன் உடன் வந்த நண்பர்கள். தடுக்க முயன்றவர்களை கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் தெரிகிறது.
அனுசுயா காரில் ஏறி நொடிப் பொழுதில் தப்பிச்செல்வதை தெருவாசி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார் . மேலும் இந்த களேபரத்தில் அனுசியாவின் அக்கா மகளான மித்ராவின் காதுப்பகுதியில் இளைஞர்கள் எடுத்து வந்த கத்தி பட்டதில் காயம் ஏற்பட்டு இரத்தம் வெளிவந்திருக்கிறது. இதனால் குழந்தை மித்ரா கதறி அழும் காட்சிகளும், மின்னல் வேகத்தில் கார் கிராமத்தினுள் பறந்து செல்லும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக குழந்தை மித்ரா தஞ்சாவூர் அரசு மருத்துவ க் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அனுசியாவின் உறவிர்கள் அளித்த புகாரின் பேரில் கீழப்பழுவூர் காவல்துறையினர், தீவிர விசாரணை செய்து காரில் ஏறி தப்பிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.