தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னையில், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேர்தலின் போது மொபைல் போன் வாக்குச்சாவடிகளில் அனுமதி கிடையாது என்பதால் வாக்காளர்களுக்கான செல்போன் வைப்பு அறை வசதிகள் ஏற்படுத்தப்படும். நீண்ட காலமாக இருந்து வந்த தேர்தலுக்கான நடைமுறையிலிருந்து மாறுபட்டு முதன்முறையாக வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்க திருத்தம் கொண்டுவரப்பட்டது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சமாக 1200 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதிகப்படியான மக்கள் தொகை அடங்கிய குடியிருப்பு பகுதியில் தேவைக்கேற்ப கூடுதலாக வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் நீக்கம், புதிய பெயர் இணைப்பது, பெயர் திருத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளை விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டில் பாகம் எண், வாக்காளர் வரிசை எண் உள்ளிட்டவை பிரதானமாக இருக்கும்படி தகுந்த வகையில் வடிவமைக்கப்படும். தேர்தல் மேலாண்மை நிறுவனத்தின் மூலமாக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இந்த வருடத்திற்குள் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.