Skip to content

241 பேரை பலிகொண்ட அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் என்ன?

  • by Authour

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 1.38 மணிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணிகள் விமானம் லண்டனுக்கு புறப்பட்டது. இதில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள், 230 பயணிகள் என 242 பேர் பயணம் செய்தனர்.

இந்நிலையில், புறப்பட்ட 2 நிமிடங்களில் அகமதாபாத் மெஹானி நகர் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில், விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.  ஒருவர் மட்டும் உயிர்தப்பினார்.

விமான பயணிகளில் 169 பேர் இந்தியர்கள். பிரிட்டனை சேர்ந்த 53 பேர், போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த 7 பேர், கனடாவை சேர்ந்த ஒருவரும் விமானத்தில் இருந்தனர். விமான ஊழியர்கள், பயணிகள் என மொத்தம் உள்ள 242 பேரில், 128 பேர் ஆண்கள், 100 பேர்பெண்கள், 14 பேர் குழந்தைகள் என தெரியவந்தது. குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் விமானத்தில் பயணம் செய்துள்ளார். விபத்தில் அவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏற்பட்ட  மிகப்பெரிய  விமான விபத்துக்களில் இது 2வதாக கருதப்படுகிறது. இதற்கு முன்  1996 நவம்பர்  12ம் தேதி  சவுதி விமானமும்,  கஜகஸ்தான் விமானமும், அரியானாவின் சார்கிதாத்ரி அருகே நடுவானில் மோதிக்கொண்டதில்  349 பேர் பலியானார்கள். இது தான்  இந்தியாவில் நடந்த  விமான விபத்தில்  அதிகம் பேரை பலிகொண்ட விபத்து.

இதற்கு அடுத்ததாக இப்போது தான்  241 விமான பயணிகளும், மற்றும் விமானம் விழுந்த இடத்தில்  இருந்த  5 மருத்துவ மாணவர்களும் பலியானார்கள்.

இந்த விமான விபத்து குறித்து  பல்வேறு தகவல்கள் கூறப்படுகிறது.

விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஏர் இந்தியா விமானம் சரியான வேகத்தில்தான் இயக்கப்பட்டுள்ளது. ஆனால், தரையைவிட்டு எழும்பி  பறக்க தொடங்கிய பிறகு,போதுமான உயரத்துக்கு மேலே எழும்பவில்லை.அதாவது  2  நிமிடத்தில் விமானம் 2 ஆயிரம் அடி முதல் 3 ஆயிரம் அடி உயரத்திற்கு  சென்றிருக்க வேண்டும். ஆனால் இந்த விமானம் 675 அடியில் தான் பறந்துள்ளது.
இதனால்  விமானி  உடனடியாக  விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு (மே டே கால்)தகவல் தெரிவித்தார்.   கட்டுப்பாட்டு அறையில் இருந்து பதில்  அளித்தனர். ஆனால் அந்த பதிலை விமானி கவனத்தில் கொள்ளும் முன் விமானம் விழுந்து  நொறுங்கி விட்டது.
கீழே விழுந்த வேகத்தில் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது.லேண்டிங் கியர் கோளாறு காரணமாக விமான சக்கரம் ஏதாவது கட்டிடம் மீது மோதியிருக்கலாம்.
விமானத்தில்  பறவைகள் மோதியிருக்கலாம். விமான இன்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டிருக்கலாம். இதுபோன்ற காரணங்களால் விபத்து நேரிட்டிருக்க வாய்ப்பு உள்ளது.
விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்ய வேண்டும். விபத்து குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். அதன் பிறகே, விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று விமான நிலைய வட்டாரங்கள்  தெரிவித்தன.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும்,   குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் ,  உள்துறை அமைச்சர்  அமித்ஷா,  சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்
ராம் மோகன் நாயுடு ஆகியோரும்  மீட்பு படையினர், காவல் துறை, தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படை என அனைத்து வித   மீட்பு படையும் அங்கு விரைந்தது.

நீண்ட தூரம்  செல்லும் விமானம் என்பதால்  சுமார் 1.25 லட்சம் லிட்டர் பெட்ரோல் விமானத்தில்  நிரப்பப்பட்டதாக கூறப்படுகிறது.  விபத்துக்குள்ளான விமானம் போயிங் ரக விமானம் என்பதால் மணிக்கு 14 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் தேவைப்படும்.

விமானம் புறப்பட்ட 2 நிமிடங்களில், அருகே உள்ள மருத்துவ கல்லூரி விடுதி மீது மோதியுள்ளது. இதில், விமானம் வெடித்து சிதறி, சுற்றுவட்டார பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.  மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்த 5 மாணவர்களும் பலியானார்கள்.

இன்று காலை பிரதமர்  மோடியும்  அகமதாபாத் சென்று,  விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். காயங்கள் அடைந்து மருத்துவமனையில் உள்ளவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்.  இதற்கிடையே  விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா  ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என  ஏா் இந்தியா விமான நிறுவனம் அறிவித்து உள்ளது.

அகமதாபாத்  விமான விபத்துக்கு காரணம்  என்ன என்பதை   கறுப்பு பெட்டி மூலமே கண்டறிய முடியும்.  இது விமானத்தின் வால் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு சாதனம்.  இந்த கறுப்பு பெட்டியை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இதனை ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர்.  ஆய்வு முடிவுகள்  வர 10 முதல் 15 நாட்கள் ஆகலாம் என தெரிகிறது.

விமானிகள், ஊழியர்களின் உரையாடல்கள் அனைத்தும்  கறுப்பு பெட்டியில்  பதிவாகும். விமானத்தின் வேகம், பறக்கும் உயரம், திசை, காலநிலை உள்ளிட்ட தகவல்களும் பதிவாகும். பெரும் தீ விபத்து, கடலில் மூழ்கினாலும் கறுப்பு பெட்டிக்கு பாதிப்பு ஏற்படாது.

இந்தியா  கேட்டுக் கொண்டால், விபத்து குறித்த விசாரணைக்கு உதவ  தயாராக  இருப்பதாக   அமெரிக்க விமான போக்குவரத்து துறைப்ஏஏ) தெரிவித்துள்ளது.

error: Content is protected !!