2025 ஜூன் 12 அன்று, அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் செல்லும் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171, போயிங் 787-8 ட்ரீம்லைனர்) புறப்பட்ட சில நிமிடங்களில் மேகனிநகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் பிற்பகல் 1:17 மணிக்கு புறப்பட்டு, 1:38 மணியளவில் இருந்து கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.
இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட மொத்தம் 242 பேர் பயணித்தனர். இவர்களில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் குடிமக்கள், ஒரு கனடியர், மற்றும் 7 போர்ச்சுகீசியர்கள் அடங்குவர். இந்த பயங்கர விபத்தில் முதற்கட்டமாக விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்தவர்களில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்கிற தகவல் வெளியாகாமல் இருந்தது.
இதனையடுத்து, அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 274 ஆக உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது மோதியதில் மாணவர்கள் 10 பேர், பொதுமக்கள் என 33 பேர் உயிரிழப்பு என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, இன்று, ஜூன் 14, 2025, விமான பாதுகாப்பு தொடர்பாக மிக முக்கியமான உயர்மட்ட கூட்டம் நடைபெற உள்ளது. இதற்குக் காரணம், சமீபத்திய விமான விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்திருப்பதும், இதில் 33 பேர் தரையில் இருந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டிருப்பதும் ஆகும். இந்தக் கூட்டத்தில், விமான விபத்துகளைத் தடுக்கவும், பயணிகள் மற்றும் தரையில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தீர்மானகரமான நடவடிக்கைகள் விவாதிக்கப்பட உள்ளன.
