விமான விபத்து நிகழ்வு ரொம்ப வருத்தமா இருக்கு, ஆண்டவன் அருளால் இனி இதுபோன்ற விபத்துகள் நடக்காம இருக்கணும்” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் கடந்த 12ம் தேதி விபத்தில் சிக்கியது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது தூரத்திலேயே சரியாக 3 நிமிடங்களுக்குள்ளாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையம் அருகே மேகானி நகர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பி.ஜே.மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதியின் மீது விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்த உடனேயே வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயனித்த 2 விமானிகள், 10 விமான பணியாளர்கள் உட்பட 242 பேரில் 241 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிர்பிழைத்துள்ளார். விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது மோதியதில் மருத்துவ மாணவர்கள் , பொதுமக்கள் என 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களத்து வருத்தத்தை தெரிவித்து வந்தனர். அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த் , அகமதாபாத் விமான விபத்து மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.
இன்று காலை ‘ஜெய்லர் 2’ பட ஷூட்டிங்கிற்காக வெளிநாட்டிற்கு செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது செய்தியாளர்கள் விமான விபத்து குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “அகமதாபாத் விமான விபத்து மிகவும் வருத்தமான விஷயம். ஆண்டவன் அருளால் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கணும்” என்றார்.
கூலி படம் வெளியாகவுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “கூலி திரைப்படத்தின் ஷீட்டிங் முடிந்துவிட்டது. படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகிறது. படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டதே” என்றார். ‘ஜெய்லர் 2’ அப்டேட் கொடுக்குமாறு கேட்டதற்கு, ஜெய்லர் 2 ஷூட்டிங்கிற்கு தான் செல்வதாக ரஜினி தெரிவித்தார்.