Skip to content

”வடம்” படத்தில் மாடு வரும் அனைத்து காட்சியுமே ஒரிஜினல் தான்- நடிகர் விமல்

தயாரிப்பாளர் ராஜசேகர் தயாரிப்பில் இயக்குனர் கேந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் விமல்,நட்டி சுப்பிரமணியம், சனக்‌ஷா ஸ்ரீ, பால சரவணன், முனீஸ்கான், ஆகிய பிரபலங்கள் நடிப்பில் உருவாகி உள்ள வடம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இசையமைப்பாளர் D.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் கிராமங்களிலும் மாடுபிடி வீரர்கள் மாட்டின் உரிமையாளர்கள் என பலரது மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இத்திரைப்பட குழுவினர்களான இயக்குனர் கேந்திரன், நடிகர் விமல், நடிகை சனக்‌ஷா ஸ்ரீ, உள்ளிட்டோர் கோவை ப்ரூக்பீல்ட் மாலில் உள்ள PVR திரையரங்கிற்கு வருகை புரிந்து ரசிகர்களை சந்தித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து படம் குறித்தும் படத்தின் வரவேற்பு குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் விமல் இந்த படத்தை வெற்றி படமாக மாற்றிய தமிழக ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் மாடு வளர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் இந்தபடத்தில் வரும் மாட்டின் உண்மையான பெயர் சோழன் என்றும் அதிகமாக இனிப்புகளை உட்கொள்வார் வாழைப்பழங்களை உட்கொள்வார் என்று கூறிய அவர் இந்த திரைப்படத்தில் மாட்டிற்கும் மிக முக்கியமான பங்கு உள்ளது என தெரிவித்தார். இந்தப் படத்தில் நான் எங்கும் கஷ்டப்பட்டு நடிக்கவில்லை இஷ்டப்பட்டு தான் நடித்தேன் என்று கூறினார்.

மேலும் இந்த மாடு வரும் அனைத்து காட்சிகளுமே ஒரிஜினல் தான் என்றும் எங்குமே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்யவில்லை என்று குறிப்பிட்டார். இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களுமே மிகவும் அருமையாக இருப்பதாகவும் குறிப்பாக பாண்டிமுனி பாடல்களை விழாக்களில் கூட பயன்படுத்தி வருகிறார்கள் என தெரிவித்தார்.

இந்த படத்தை அடுத்து ஏழாம் பொருத்தம் என்ற ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் சிம்புதேவன் இயக்கத்தில் ஒரு படத்தை நடித்து வருவதாகவும் மேலும் விலங்கு 2 Webseries கதை விவாதம் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

தற்பொழுது உள்ள இளைஞர்கள் GenZ யினர்களும் ஒவ்வொரு விஷயத்தையும் நன்கு யோசித்து செய்கிறார்கள் தற்போது திரைத்துறைக்கு வருபவர்களும் நன்கு பயிற்சி உடன்தான் வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

அரசியல் தொடர்பான கேள்விக்கு அரசியலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. ஆனால் நான் ஒரு விஜய் ரசிகர் என்றும் கில்லி படத்தில் அவருடன் இணைந்து பணிபுரிந்துள்ளேன் என தெரிவித்தார். விஜய் கில்லியில் எப்படி இருந்தாரோ அதுபோன்றுதான் தற்பொழுதும் அனைவரிடமும் அன்பாக பழகி வருகிறார் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் அவருடைய அரசியல் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார். விஜயுடன் இணைந்து செல்வீர்களா என்ற கேள்விக்கு அது காலம் தான் தீர்மானிக்கும் என்று பதிலளித்தார். நடிகர் விமல் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு தற்போதைக்கு நான் படங்களை நடிக்க வேண்டும் என்றுதான் இருக்கிறேன் அரசியலில் நல்லது செய்பவர்கள் அனைவருடனும் இணைந்து துணையாக இருப்பேன் என பதில் அளித்தார். மகளிர் தின விழாவில் விஜய் பல்வேறு திட்டங்களை அறிவித்தது தொடர்பான கேள்விக்கு அது நல்ல விஷயம் தான் பொதுவாகவே எந்த கட்சியாக இருந்தாலும் நல்ல விஷயம் செய்யும் பொழுது மகிழ்ச்சி அளிக்கிறது இவரும் நல்லது செய்வார் என தெரிவித்தார். அரசியலைப் பற்றி பெரிதளவு Knowledge இல்லை அதனால் அரசியல் வேண்டாம் என பதில் அளித்தார்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த படத்தின் இயக்குனர் கேந்திரன், நல்ல படங்களை தமிழக ரசிகர்கள் என்றும் தவற விட்டதில்லை என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளது அந்த வரிசையில் இந்த படமும் ஒன்று என தெரிவித்தார். மக்கள் நல்ல படங்களைக் கொண்டாடினால் அடுத்தடுத்து நல்ல படங்களை எடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் முன் வருவார்கள் என தெரிவித்தார். வடமாடு மஞ்சு விளையாட்டு போட்டியை திரையில் பார்ப்பது ஒரு புது அனுபவத்தை கொடுக்கும் எனவும் தெரிவித்தார்.

விலங்கு நல ஆர்வலர்களிடமிருந்து ஏதாவது எதிர்மறை கருத்துக்கள் வந்ததா என்ற கேள்விக்கு, விலங்குகளை துன்புறுத்தக் கூடாது அவ்வளவு தானே தவிர மாடு என்பது ஒரு உருவம் தான் அதற்குள் அதிகமான அன்பு உள்ளது இந்த படத்தில் நடித்த மாடு எளிதில் தங்களுடன் பழகிவிட்டது என்று தெரிவித்தார். நாம்தான் மாடு என்று ஒதுக்கி வைக்கிறோம் என்று தெரிவித்த அவர் அனைத்து மிருகங்களுக்குள்ளும் ஒரு அன்பு உள்ளது அதை நாம் தேடிப் பிடிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் இந்த படத்தைப் பார்த்த மாடு வளர்க்கும் நபர் ஒருவர் இந்த படத்தை பார்த்துவிட்டு தன்னிடம் கண்கலங்கியதாகவும் அதில் அன்பை பார்க்க முடிந்ததாக தெரிவித்தார். மேலும் மாட்டை வளர்க்கும் அனைவருக்கும் இந்த படம் ஒரு மகிழ்ச்சியை தரும் என்று கூறினார்.

முதலாளித்துவம் பெரியவர்கள் சிறியவர்களை தாழ்த்துவது போன்ற விஷயங்கள் அனைத்து தொழில்களிலும் உள்ளது சினிமாவில் அதிகமாகவே உள்ளது என தெரிவித்தார். அது தனக்கும் நடந்ததாகவும் சில விஷயங்களை தெரிவித்த அவர் அனைத்தையும் நாம் கடந்து தான் வர வேண்டும் இதுவும் இன்ட்ரஸ்ட் ஆக தான் உள்ளது என தெரிவித்தார்.

ஜனநாயகம் திரைப்படம் சென்சார் விவகாரம் பற்றிய கேள்விக்கு, சென்சார் போர்டு என்பது தனி டிபார்ட்மெண்ட் அதில் என்ன காரணம் என்பதை தயாரிப்பாளரும் சென்சார் போர்டு மட்டும்தான் பேசி தீர்க்க முடியும் வேறு யாருமே இதற்கு பதில் சொல்ல முடியாது என தெரிவித்தார். அதேசமயம் இது மற்ற பதங்களுக்கு பாதிப்பு வருமா என்று கேட்டால் அது வராது எனவும் கூறினார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் அதிகமான காளைகளை அடக்கும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவோம் என்று முதல்வர் அறிவித்த அறிவிப்பு குறித்தான கேள்விக்கு, அது மிகவும் நல்ல விஷயம் மாடுபிடி வீரர்கள் உயிரை பணயம் வைத்து தான் மாட்டை பிடிக்கிறார்கள் இதனை நாங்கள் ஒரு வேண்டுகோளாகவே வைக்கிறோம் மாடுகளுக்கும் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட இயக்குனர் கேந்திரன் மற்றும் நடிகர் விமல் ஆகியோர் இந்த விளையாட்டை எந்த ஒரு பொருளாதார அடிப்படையும் இல்லாமல் அன்பை மட்டும் சுமந்து கொண்டு அந்த வேலையை செய்து வரும் மனிதர்களுக்கு ஒரு அங்கீகாரத்தை நாம் நிச்சயமாக தர வேண்டும் என்றும் முதல்வரிடம் எங்கள் படக்குழு சார்பில் இதனை ஒரு கோரிக்கையாகவே வைக்கிறோம் என்று தெரிவித்தனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகை சனக்‌ஷா ஸ்ரீ, களவாணி படத்தில் “ஆடி போய் ஆவணி வந்தால் டாப்பில் வருவான்” என்ற வசனத்தை குறிப்பிட்டு அதுபோன்று இந்த படத்தில் நடிகர் விமல் டாப்பில் வந்துள்ளார் என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.

error: Content is protected !!