திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த கோவர்த்தனகிரி, காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (41). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மீனா (38). இவர்களுக்கு பவ்யஸ்ரீ (15) என்ற மகளும், ஹரிஹரன் (13) என்ற மகனும் இருந்தனர். பவ்யஸ்ரீ, தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். ஹரிஹரன், 8-ம் வகுப்பு படித்து வந்தார். மீனாவின் உறவினரான ஆந்திராவை சேர்ந்த நந்தினி என்பவர் பிரசவத்துக்காக சில தினங்களுக்கு முன்பு சதீஷ் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார். இதனால் குழந்தைக்காக வீட்டின் மாடியில் உள்ள படுக்கை அறையில் சேலையால் தொட்டில் கட்டப்பட்டிருந்தது. நந்தினி சொந்த ஊருக்கு சென்ற பிறகும் குழந்தைக்காக கட்டிய தொட்டிலை கழட்டாமல் இருந்தனர். அதில் ஹரிஹரன் விளையாடுவது வழக்கம் என தெரிகிறது.
நேற்று முன்தினம் மாலை சதீஷ், தனது மகன் ஹரிஹரனை பள்ளியில் இருந்து ஆட்டோவில் அழைத்துவந்து வீட்டில் விட்டு விட்டு மீண்டும் சவாரிக்கு சென்றுவிட்டார். மீனா, அவரது மகள் பவ்யஸ்ரீ இருவரும் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். வீட்டில் ஹரிஹரன் மட்டும் தனியாக இருந்தான். வழக்கம் போல் ஹரிஹரன், மாடியில் உள்ள அறையில் சேலையால் கட்டிய தொட்டிலில் விளையாடினார். அப்போது தொட்டில் முறுக்கிக் கொண்டு கழுத்தை இறுக்கியதால் ஹரிஹரனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார்.
வீட்டுக்கு திரும்பி வந்த மீனா, தனது மகன், சேலை கழுத்தை இறுக்கிய நிலையில் தொட்டிலில் தொங்கியபடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஹரிஹரனை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஹரிஹரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

