தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 2026 ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் தேர்தலை நோக்கி தங்கள் பிரசார வியூகங்கள், கூட்டணி பேரங்களை நடத்தி வருகிறது.
திமுக தலைமையிலான கூட்டணி கடந்த தேர்தலை போலவே அப்படியே இருக்கிறது. அதிமுக மெகா கூட்டணி அமைக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் இதுவரை பாஜக மட்டும் அந்த கூட்டணியில் உள்ளது. வேறு யாரும் அதிமுகவுடன் கூட்டணி என கூறவில்லை.
அதே நேரத்தில் ஜி.கே. வாசனின் தமாகா , தாங்கள் என்டிஏ கூட்டணியில் இருப்பதாக கூறுகிறார்கள். தினகரனும் அப்படியே கூறுகிறார். பாரிவேந்தர் இந்த பிரச்னையில் சிக்காமல் கடைசி நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் என இருக்கிறார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பிரசார பயணத்தை இப்போதே மேற்கொண்டுள்ளார். இதில் பேசிய அவர் அதிமுக கூட்டணியில் சேர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு இன்று பாமக தலைவர் அன்புமணி பதில் அளித்தார். பாமக தோற்றுவிக்கப்பட்ட தினமான இன்று அவர் விடுத்துள்ள செய்தில், தமிழ்நாட்டை ஆளும் ஆட்சியில் பங்கேற்பது பாமகவின் உரிமை என்று பதிவிட்டு உள்ளார்.
பாஜகவுக்கே ஆட்சியில் பங்கு கிடையாது என கூறிவரும் எடப்பாடி, இப்போது இரண்டாக உடைந்துள்ள பாமகவின் ஒரு பிரிவு, தங்களுக்கும் ஆட்சியில் பங்கு என கேட்பதால், பெரிய சிக்கலில் சிக்கி கிடக்கிறார் எடப்பாடி. அதே நேரத்தில் அன்புமணி பிரிவில் உள்ள வக்கீல் பாலு, 2026ல் பாமக ஆட்சியில் இடம் பெறும். நாங்கள் இடம் பெறும் கூட்டணி தான் வெற்றி பெறும் என கூறி உள்ளார்.
அதே நேரத்தில் பாமக யார் வசம் உள்ளது என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படாத நிலையில் உள்ளது.பாமகவுக்கு ராமதாசும், அன்புமணியும் உரிமை கொண்டாடி வருகிறார்கள். பாமகவை சட்டப்படி கைப்பற்ற இருவரும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதற்குள் அன்புமணி ஆட்சியில் பங்கு கேட்டு உள்ளார். இதனால் தான் அவர், தவெக தலைவர் விஜயைப்போல அதிமுகவை பற்றி விமர்சிப்பதில்லை.
