தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. , இதனால் பாஜகவின் கவனம் தமிழகத்தின் பக்கம் திரும்பி உள்ளது. இதன் முதல்கட்டமாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் பல கட்சிகளை கூட்டணியில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த கட்டமாக தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜனாதிபதி பதவி வழங்குகிறது. இதனால் சிபி ஆர் வகித்து வந்த மகாராஷ்ட்ரா கவர்னர் பதவி காலியாகிறது.
நாகாலாந்து கவர்னராக இருந்த தமிழகத்தை சேர்ந்த இல. கணேசன் காலமாகி விட்டார். எனவே காலியாகும் 2 கவர்னர் பதவிகளையும் நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு நாகாலாந்து கவர்னர் பதவி தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு மீண்டும் வழங்கப்படலாம். அல்லது வேறு ஏதாவது ஒரு மாநில கவர்னர் பதவி தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு கிடைக்கும் என தெரிகிறது.
அந்த பதவியை தமிழகத்தை சேர்ந்த பாஜகவின் மூத்த நிர்வாகி ஹெச். ராஜாவுக்கு வழங்கலாம் என்று கூறப்படுகிறது. அத்துடன் மத்திய அமைச்சரவையிலும் தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலைக்கு இடம் அளிக்கப்படலாம் என்றும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.