இன்று சர்வதேச போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபக் சிவாச் தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி மற்றும் காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபக் சிவாச் முன்னிலையில் 1200-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் போதைப் பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன், அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
பாலசுப்பிரமணியன் (பொறுப்பு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர்.மாணவ- மாணவிகள் போதைப் பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்றனர்.
நடைப்பேரணி அரியலூர் அண்ணா சிலை அருகே தொடங்கி,கடை வீதி, சத்திரம் வழியாக சென்று காமராஜர் ஒற்றுமை திடலில் முடிவடைந்தது. இறுதியாக பேரணியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் தண்ணீர் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ரகுபதி, கயர்லாபாத் காவல் ஆய்வாளர்வேலுச்சாமி, அரியலூர் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர். அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் பேரணி ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டார்.
