அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு கோதண்ட ராமசாமி திருக்கோவில் வரலாற்று சிறப்புமிக்கதாகும். தமிழகத்திலேயே ஆறடி உயரம் உள்ள பெருமாளின் தசாவதார சிற்பங்கள் உள்ள ஒரே கோவில் இதுவாகும். சிறப்பு வாய்ந்த இக்கோவிலின் தேரோட்டம் 82 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது நடைபெற உள்ளது. இதற்காக இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பக்தர்களின் நிதி உதவியுடன் 15 அடி அகலம் 15 அடி உயரம் 15 டன் எடையுள்ள புதிய திருத்தேர் செய்யப்பட்டுள்ளது. பெருமாளின் அவதாரங்கள், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர் உள்ளிட்ட கடவுள்களின் சிற்பங்கள் பொறிக்கப்பட்ட புதிய திருத்தோர் ரதபிரதிஷ்டை இன்று நடைபெற்றது. கோவிலின்
தென்புறத்தில் புதிதாக அமைக்கப்பட்ட திருத்தேருக்கு பூஜைகள் செய்யப்பட்டு தஞ்சாவூர் சாலை, வெள்ளாளர் தெரு, மங்காய் பிள்ளையார் கோவில் தெரு வழியாக பழைய தேரடியில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கிருஷ்ணன் கோவிலில் திருத்தேர் ரத பிரதிஷ்டை செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து கிருஷ்ணன் கோவிலில் நிலை நிறுத்தினர். பின்னர் திருத்தேருக்கு தீபாராதணை நடைபெற்றது. வருகின்ற எட்டாம் தேதி திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது. போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள், ஸ்ரீ நரசிம்மா டிரஸ்ட் மற்றும் பக்தர்கள் திருத்தேர் ரத பிரஷ்டையில் கலந்து கொண்டனர்.

