தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலை கவசமும், அணிந்து வந்தவர்களுக்கு ஒரு தார் வாழைப்பழமும் வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தஞ்சாவூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நகர போக்குவரத்து காவல் பிரிவு மற்றும் அனு மருத்துவமனை ஆகியவை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.
நிகழ்ச்சிக்கு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். அனு மருத்துவமனை முதன்மை இருதய மருத்துவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர்.வி.சிவகுமார் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து அனு மருத்துவமனை எதிரில் போக்குவரத்து பிரிவு போலீசார் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களை வரிசைப்படுத்தி நிறுத்தினர். பின்னர் அவர்களுக்கு சிறப்பு விருந்தினர் மாவட்ட
எஸ்.பி., ஆர். ராஜாராம் தலைக்கவசத்தை வழங்கினார். மேலும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் தலைக்கவசம் அணிந்து அணிந்து வந்தவர்களுக்கு திருவையாறு வாழை விவசாயி மதியழகன் ஒரு தார் வாழைப்பழங்களை வழங்கினார். இதில் போக்குவரத்து காவல் பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.ஜி.ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சந்திரகுமார், பாபநாசம் பெனிபிட் ஃபண்ட் நிர்வாக இயக்குனர் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நூதன விழிப்புணர்வு குறித்து மாவட்ட எஸ் பி ராஜாராம் நிருபர்களிடம் கூறுகையில், தலைக்கவசம் அணிவது மிகவும் அவசியமான ஒன்றாகும். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அனைவரும் தலைக்கவசம் அணிந்துதான் செல்ல வேண்டும். அது உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பை அளிக்கும் ஒன்றாகும். எனவே தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டக்கூடாது. தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலைக்கவசமும், அணிந்து வந்தவர்களுக்கு திருவையாறு வாழை விவசாயி மதியழகன் சார்பில் ஒரு தார் வாழைப்பழமும் வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது என்றார்