பெங்களூரு கிரிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தவர் கிரண்குமார். இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த நகைகளைச் சரிபார்த்தபோது, சுமார் 2 கிலோ 783 கிராம் தங்கம் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், உதவி மேலாளர் கிரண்குமாரே அந்த நகைகளைத் திருடியது அம்பலமானது. திருடப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.4 கோடியே 12 லட்சம் ஆகும். அவர் அந்த நகைகளைத் தனியார் நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்ததுடன், சில நகைகளை விற்பனையும் செய்துள்ளார். இதையடுத்து போலீசார் கிரண்குமாரைக் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

