அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாலரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் வீடு மற்றும் சென்னை உயர்நீதிமன்றம், சிபிஐ நீதிமன்றம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது. மர்மநபர்கள் விடுத்த இந்த மிரட்டலின் அடிப்படையில் அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள், சென்னை மாநகரப் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் முதலாவதாக எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்துள்ள நிலையில், மிரட்டல் வெறும் புரளி என போலீஸார் தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமிக்கு “Y Plus” பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், அவரது வீட்டிற்கு 3வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரது பாதுகாப்பை ‘இசட் பிளஸ்’ பிரிவுக்கு மாற்ற அதிமுகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றன.
