ஜேகே டயர் நடத்தும் எப்எம்எஸ்சிஐ தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2023 போட்டியின் 2வது சுற்றின் 2வது நாள் போட்டிகள் கோவை காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெற்றன. எல்ஜிபி பார்முலா 4 பிரிவில் தலா ஒரு போட்டியில் ஆர்யா சிங் மற்றும் டி.எஸ். தில்ஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த சனிக்கிழமை நடந்த இரண்டு பந்தயங்களிலும் ஆர்யா ஸ்டைலாக காரை ஓட்டி சாதனை படைத்தார். அது அவருக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்திருந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் அவரால் இரு பந்தயங்களிலும் முதலிடத்தை பிடிக்க முடியவில்லை. நேற்றை ஆட்டம் மிகவும் கடுமையாக இருந்தது. முதல் பந்தயத்தில் ஆட்டத்தை சிறப்பாக துவக்கிய தில்ஜித்தால் ஆர்யாவுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. ஆர்யா சிறப்பாக காரை ஓட்டி முதல் பந்தயத்தில் முதலிடம் பிடித்தார். இருப்பினும் தில்ஜித்தும் விடாமல் கடுமையாக போராடினார். இரண்டு போட்டியிலும் 2வது இடத்தை டார்க்டான் ரேசிங் திஜில் ராவ் தக்கவைத்துக் கொண்டார். ஆர்யா முதல் பந்தயத்தின் கடைசி 5 சுற்றுகளிலும் பாதுகாப்பாகவும் மிகவும் திறமையாகவும் காரை ஓட்டி ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தினார். இந்த வெற்றி குறித்து ஆர்யா கூறுகையில், முதல் பத்து சுற்றுகளிலும் எனது அணியைச் சேர்ந்த வீரருடன் மோதுவது என்பது எனக்கு உற்சாகத்தை அளித்ததோடு இறுதியில் அவரை வென்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்று தெரிவித்தார்.
இரண்டாவது பந்தயம் டார்க் டான் ரேசிங் குழுவிற்கு மிகவும் கடுமையானதாக இருந்தது. இரண்டாவது பந்தயத்தில் கேரள வீர்ர் டி.எஸ். தில்ஜித் சிறப்பாக காரை ஓட்டி வெற்றி பெற கடும் முயற்சிகளை மேற்கொண்டார். இந்த நிலையில் அவருக்கு கடும் போட்டியாக திஜில் ராவ் மற்றும் ஆர்யா சிங் இருவரும் தொடக்கம் முதலே கடுமையாகப் போராடி இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். ஜேகே டயர் நோவிஸ் கோப்பை
பிரிவில் தலா ஒரு போட்டியில் அர்ஜுன் எஸ். நாயர் மற்றும் நெய்தன் மெக்பெர்சன் வெற்றி பெற்றனர். சாம்பியன் அர்ஜுன் முதல் பந்தயத்தில் சிறப்பான வெற்றியைப் பெற்றார், ஆனால் இரண்டாவது பந்தயத்தில் மெக்பெர்சனிடம் தனது வெற்றியை பறிகொடுத்தார். ஒவ்வொரு பந்தயத்திலும் இருவரும் சிறப்பாக காரை ஓட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள். ஜேகே டயர் வழங்கும் ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பை பிரிவில் பெங்களூரைச் சேர்ந்த ஜெகதீஷ் நாகராஜ் தனது சக போட்டியாளர்களுடன் கடுமையாக போராடி முதலிடம் பிடித்தார். இதேபோன்று பெங்களூரைச் சேர்ந்த உல்லாஸ் நந்தா மற்றும் அபிஷேக் வாசுதேவ் ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்து பெங்களூருக்கு பெருமை சேர்த்தனர். ஜேகே டயர் வழங்கும் 250 கோப்பை பிரிவில் ஹுப்பள்ளியைச் சேர்ந்த சர்வேஷ் பாலப்பா முதலிடத்தையும், சாலக்குடியைச் சேர்ந்த ஆல்ட்ரின் பாபு இரண்டாவது இடத்தையும் 3வது இடத்தை வதோதராவின் ஆஷிஷ் பட்டேல் ஆகியோர் பிடித்தனர்.