‘ரோஸ் டே’ கொண்டாட்டத்தின் போது கணவருக்கு மதுவை வழங்கி வீடியோ வெளியிட்ட சமூக வலைதள பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பீகார் மாநிலம் முங்கேர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காஞ்சன் குமாரி என்பவர், சமூக வலைதளங்களில் சுமார் 3 லட்சம் ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பியூட்டி பார்லரில் அமர்ந்து கொண்டு போஜ்புரி பாடலுக்கு கைத்துப்பாக்கியுடன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். முன்னதாக உரிமம் பெற்ற துப்பாக்கியை சட்டவிரோதமாக கையாண்டு பொதுவெளியில் காட்டியது தொடர்பாக இவர் மீது ஏற்கனவே புகார்கள் எழுந்தன. இந்நிலையில், கடந்த 7ம் தேதி ‘ரோஸ் டே’ கொண்டாட்டத்தின் போது தனது கணவர் ராகுல் குமாருக்கு ரோஜா பூ கொடுத்து, மது பாட்டிலையும் மது கோப்பையையும் காஞ்சன் குமாரி வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலானது.
பீகாரில் 2016ம் ஆண்டு முதல் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், இந்த வீடியோ பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்திய எஸ்பி சையத் இம்ரான் மசூத், ‘சட்டத்தை மீறிய காஞ்சன் தேவி, அவரது கணவர் ராகுல் குமார் மற்றும் துப்பாக்கி உரிமையாளர் விஷால் குமார் ஆகியோர் மீது காசிம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்’ எனத் தெரிவித்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

