கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது தொடர்ந்து கடந்த மாதம் 19 ஆம் தேதியில் இருந்து கரூர் சுற்றுலா மாளிகையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இரண்டு நாட்களாக த.வெ.க பொறுப்பாளர்களான துணைப் பொதுச் செயலாளர் ஆனந்த்,தேர்தல் வியூக பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா,இணை பொதுச் செயலாளர் சிடி நிர்மல் குமார்,கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன்,கரூர் மாநகர பொறுப்பாளர் மாசி பவுன்ராஜ் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இன்று சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரிடம் நேரில் வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதற்காக இன்று இந்திரா நகர் பகுதியில் வசித்து வந்த இறந்த சிறுவனின் பெற்றோர் விமல் – மாதேஸ்வரி,இறந்த சந்திராவின் கணவர் செல்வராஜ்,கோடாங்கிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷின் தம்பி சக்திவேல். கரூர் வெங்கமேடு பகுதியைச் சார்ந்த பிரபாகரன் உட்பட 10 பேருக்கு மேல் சம்மன் அனுப்பப்பட்டு,
தற்போது 9 குடும்பத்தை சார்ந்தவர்கள் தற்போது கரூர் சிபிஐ அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.
சம்பவத்தின் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

