ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. இந்தத் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று வங்கதேசத்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது.
சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை வென்ற நிலையில் இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் களமிறங்குகிறது. அதேவேளையில் நஸ்முல் ஹூசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச அணியானது ஆப்கானிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இழந்த நிலையில் களமிறங்குகிறது.
இங்கிலாந்து தொடரில் ஒரு சதம், 2 அரை சதம் என 250 ரன்களுக்கு மேல் குவித்திருந்த ஷுப்மன் கில் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதேபோன்று நடுவரிசையில் ஸ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல் பலம் சேர்க்கக்கூடும். ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் பேட்டிங்கில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அணியின் பலம் அதிகரிக்கும். கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் ரிஷப் பந்த் இடம் பெறுவது கடினம்.
நஸ்முல் ஹூசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச அணி சமீபகாலமாக சிறந்த பார்மில் இல்லை. எனினும் அந்த அணி ஐசிசி தொடர்களில் முன்னணி அணிகளுக்கு பலமுறை அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. இதனால் இந்திய அணி வீரர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படக்கூடும்.
அனைத்து அணிகளும் இந்த கோப்பையை வெல்லும் திறன் கொண்டவை, ஆனால் நான் எதிரணியைப் பற்றி அதிகம் சிந்திக்காத நபர். எங்களது திட்டத்தை சரியாக செயல்படுத்தினால் எந்த நாளிலும் எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும். கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களிடம் சில தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இப்போது நஹித் ராணா, தஸ்கின் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்” எனறார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, “இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே அணியில் உள்ளனர், மீதமுள்ளவர்கள் ஆல்ரவுண்டர்கள். அவர்களால் பேட்டிங் மற்றும் பந்துவீச முடியும். நாங்கள் எங்கள் பலத்திற்கு ஏற்ப விளையாடுகிறோம். மூன்று ஆல்ரவுண்டர்களும் அணிக்கு வெவ்வேறு பரிமாணத்தை அளிக்கிறார்கள், அவர்கள் அணிக்கு நிறைய பலம் சேர்க்கிறார்கள். ஒன்றுக்குப் பதிலாக இரண்டு திறன்களைக் கொண்ட வீரர்களைக் கொண்டிருக்க நாங்கள் விரும்புகிறோம். மற்ற ஐசிசி தொடர்களை போலவே இதுவும் மிக முக்கியமான தொடர். கோப்பையை கைப்பற்ற நாங்கள் நிறைய விஷயங்களை சரியாக செய்ய வேண்டும்” என்றார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நேற்று (19-ம் தேதி) தொடங்கியது. பொதுவாக போட்டி நடைபெறும் மைதானங்களில் தொடரில் கலந்து கொள்ளும் நாடுகளின் கொடிகள் ஏற்றப்படு வதுவழக்கம். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் லாகூர் மைதானத்தில் ஏற்றப்பட்ட கொடிகளில் இந்திய தேசியக் கொடி இடம் பெறவில்லை. இது சர்ச்சையை உருவாக்கியது. இந்நிலையில் நேற்று கராச்சியில் பாகிஸ்தான் – நியூஸிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தின் போது மைதானத்தில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டிருந்தது.