ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜகாபுரா ரயில் நிலையம் அருகே இன்று காலை ஒரு பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னையில் இருந்து மேற்கு வங்காளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சென்னை சென்ட்ரல் – நியூ ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் இன்று காலை 8:51 மணியளவில் திடீரென தடம் புரண்டன.
தடம் புரண்ட பெட்டிகளில் ஒரு ஏசி (AC) பெட்டியும், இரண்டு பொதுப் பெட்டிகளும் (General Coaches) அடங்கும். அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை மற்றும் உயிர் சேதங்கள் எதுவும் இல்லை என ரயில்வே நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்து குறித்துத் தகவல் கிடைத்தவுடன், பத்ரக்கில் இருந்து மீட்பு மற்றும் மறுசீரமைப்பு குழுக்கள் (ART) சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட பெட்டிகளில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, மாற்று ஏற்பாடுகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ரயில் பெட்டிகள் தடம் புரண்டதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமா அல்லது தண்டவாளத்தில் ஏதேனும் விரிசல் இருந்ததா என்பது குறித்து உயர் மட்ட விசாரணைக்கு ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

