நாடு முழுவதும் 76வது குடியரசுத் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக, கவர்னர் ரவியை முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். முக்கிய அதிகாரிகளை கவர்னருக்கு முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் தேசிய கொடிக்கு மலர் தூவப்பட்டது. தொடர்ந்து முப்படை வீரர்கள் மற்றும் போலீசார் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ரவி ஏற்றுக்கொண்டார். சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் நீதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

