கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் கருங்கல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு சளி பிரச்சினை இருந்துள்ளது. உடனே, குழந்தையின் பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர்.
குழந்தைக்கு சளி குறைய பணியில் இருந்த டாக்டர் சொட்டு மருந்து ஒன்று கொடுத்துள்ளார். பெற்றோர் அந்த சொட்டு மருந்தை குழந்தைக்கு கொடுத்துள்ளனர். மருந்தை குடித்த குழந்தை சற்று நேரத்தில் துடிதுடித்து இறந்து போனது. பெற்றோர் குழந்தையை ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு குழந்தை இறந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர். தற்போது, பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடல் அங்கு வைக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு இந்தியாவில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து கொடுக்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
