புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து சித்தன்னவாசல் கோடை விழா – 2025 நடத்தியது. இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி விழாவில் பங்கேற்று அங்குள்ள அரங்குகள், மலர்ச்செடிகளை பார்வையிட்டார். பல்வேறு விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, மற்றும் அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.
இரண்டாம் நாளான இன்றையதினம் நடைபெற்ற சித்தன்னவாசல் கோடை விழாவில், பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
ரூபினி குழுவினரின் சிலம்பம், பரதநாட்டியம், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், கயிறு இழுத்தல் போட்டிகள், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதல், தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் நாட்டுப்புற பாடல்கள், கொடும்பாளூர் அரசு உயர் நிலைப்பள்ளி மாணாக்கர்களின் நாடகம், மகளிர் கலைக் கல்லூரி மாணவிகளின் பெண்கள் முன்னேற்ற நடனம் மற்றும் தமிழ் வளர்ச்சி நடனம், கிராமிய நடனம், பரதம், முத்து முகமது குழுவினரின் கிராமிய இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நிகழ்வுகளும் நடைபெற உள்ளது.
விழா குறித்து அமைச்சர் ரகுபதி கூறியதாவது:
பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றிற்கு முதல்வர் அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில், கோடைக் காலங்களில் சுற்றுலா தலங்களில் கோடை விழாக்களை நடத்துதல், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை ஊக்குவித்தல், பாரம்பரிய கலாச்சார விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, இதுபோன்று நடைபெறும் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்கு பொதுமக்கள், மாணாக்கர்கள் உள்ளிட்ட அனைவரும், அதிக முக்கியத்துவம் கொடுத்து பாரம்பரியத்தினை பாதுகாத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அ.அக்பர்அலி, மாவட்ட சுற்றுலா அலுவலர் .ரா.கார்த்திக், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் .து.செந்தில்குமார், வட்டாட்சியர் காமராஜு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.