Skip to content

சினிமா பாணியில் செல்போன் திருட்டு.. கோவையில் அதிர்ச்சி

சினிமா பாணியில் செல்போன் திருட்டு : மொபைல் பார்ப்பது போல் வந்து செல்போனை திருடிச் சென்ற நபர் – அதிர்ச்சி ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் !!!

​கையில் கொடுத்த போனுடன் தப்பி ஓடிய மர்ம நபர்; வெளியில் பைக்கில் காத்து இருந்த கூட்டாளி – சி.சி.டி.வி காட்சிகளால் அதிர்ச்சி !!!

கோவை, வடவள்ளியில், செல்போன் கடை ஒன்றில் வாடிக்கையாளர் போல் வந்த நபர், கடைக்காரரின் கண்ணெதிரிலேயே செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற துணிகரச் சம்பவம் அரங்கேறி உள்ளது.

இச்சம்பவம் குறித்த சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி வியாபாரிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


வடவள்ளி பகுதியில் உள்ள ஒரு மொபைல் விற்பனை கடைக்கு நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் வந்து உள்ளார். அவர் புதிய மாடல் மொபைல் வாங்குவது போலவும், அதன் சிறப்பம்சங்களை விசாரிப்பது போலவும் கடைக்காரரிடம் நடித்து உள்ளார்.

கடைக்காரர் ஒரு விலை உயர்ந்த மொபைலை எடுத்து அந்த நபரின் கையில் காண்பித்து உள்ளார். ​அவர் மொபைலைப் பார்த்துக் கொண்டு இருந்த போதே, திடீரென மின்னல் வேகத்தில் கடையை விட்டு வெளியே ஓடினார். கடைக்கு வெளியே அவரது நண்பர் ஒருவர் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்த நிலையிலேயே தயாராக வைத்து இருந்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பைக்கில் ஏறிய மர்ம நபர், கூட்டாளியுடன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

அதிர்ச்சி அடைந்த கடைக்காரர் அவர்களைத் துரத்திச் செல்வதற்குள் இருவரும் மாயமாகி விட்டனர்.

இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் உடனடியாக வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராவில், திருடனின் முகம் மற்றும் அவர்கள் தப்பிச் சென்ற வாகனம் போன்றவை பதிவாகி உள்ளன. இந்த ஆதாரங்களைக் கொண்டு வடவள்ளி போலீசார் மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!