மராட்டிய மாநில தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் வினாத்தாள் சமூக வலைதளத்தில் கசிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை, நாக்பூரில் உள்ள தேர்வு மையத்தில் மாணவி ஒருவர் தேர்வு தொடங்குவதற்கு முன்பு சந்தேகத்திற்குரிய வகையில் நடந்து கொண்டார்.
இதையடுத்து ஆசிரியர்கள் அந்த மாணவியின் செல்போனை பறிமுதல் செய்து சோதனை நடத்தினர். அப்போது, வேதியியல் தேர்வு தொடங்குவதற்கு முன்பே அந்த தேர்வின் வினாத்தாள் வாட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், தனியார் பயிற்சி மையத்தை சேர்ந்த நபர் ஒருவர் பணத்திற்காக தேர்வு வினாத்தாளை வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, இதில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

