Skip to content

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான்- அமித்ஷா மீண்டும் உறுதி

  • by Authour

தமிழ்நாட்டில் வரும் 2026ம் ஆண்டு  ஏப்ரல் மாதத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.   இந்த தேர்தலை சந்திக்க  திமுக தலைமையில் ஒரு கூட்டணி  அமைக்கப்பட்டு உள்ளது.  கடந்த தேர்தலையும் இந்த கூட்டணியில் தான் சந்திந்தனர்.

அதிமுக தலைமையில்  இன்னொரு கூட்டணி அமைக்கப்படுகிறது. இந்த கூட்டணியில் தற்போது வரை பாஜக மட்டுமே உள்ளது. அடுத்ததாக  ஜி.கே. வாசனின் தமாகா கட்சி உள்ளது.  வேறு எந்த கட்சியும் இதுவரை  இந்த கூட்டணியில் சேர வில்லை.

தமிழகத்தில்  அதிமுக கட்சிக்கு  தான் முதல்வர் பதவி வழங்கப்படும். பாஜகவும் ஆட்சியில்  பங்கு வகிக்கும் என  உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 2 மாதங்களுக்கு முன்  கூறினார். பின்னர் அதற்கு   அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில்  ஜூன்  8ம் தேதி மதுரையில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்திலும் அமித்ஷா பேசும்போது தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான். அதில் பாஜக இடம் பெறும் என்று  மீண்டும் கூறினார். ஆனால் இதுவரை அதற்கு  அதிமுகவிடம் இருந்து எந்த மறுப்பும் வரவில்லை.

எனவே பாஜகவுடன் கூட்டணி ஆட்சிக்கு  அதிமுகவினர் சம்மதித்து விட்டதாக  தெரிகிறது. மேலும் பாஜகவுக்கு  50 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.

மேலும்  பாமக, தேமுதிக மற்றும் சில உதிரி கட்சிகளை சேர்க்கவும்  அதிமுக  பாஜக சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.  அதாவது அதிமுக  தனிப்பெரும்பான்மை பெற முடியாத அளவுக்கு  சீட் ஒதுக்கீடு செய்வதிலேயே  பாஜக நெருக்கடி கொடுக்க திட்டமிட்டு உள்ளது.

இந்த கட்சிகள்  எல்லாம் சேர்ந்தாலும், தமிழகத்தில் வலிமையாக உள்ள  திமுக கூட்டணியை எதிர்க்க முடியாது என்பதால் நடிகர் விஜயையும்  கூட்டணியில் சேர்க்க  பாஜக சில நடவடிக்கைகளை  ரகசியமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில்  ஒரு பத்திரிகைக்கு அமித்ஷா  சிறப்பு பேட்டி அளித்து உள்ளார். அதில் அவர்  கூறியிருப்பதாவது:

தமிழக  சட்டமன்ற தேர்தலில்  தேசிய ஜனநாயக  கூட்டணி  நிச்சயம் அரசு அமைக்கும். அதில் பாஜக  பங்கு இருக்கும். அதிமுகவுக்கு தான் முதல்வர் பதவி.  நடிகர் விஜயின் தவெக உங்கள் கூட்டணியில் சேருமா என்ற கேள்விக்கு,  தேர்தலுக்கு இன்னும் போதுமான  காலம் இருக்கிறது. எனவே இன்னும் சில காலம்  காத்திருங்கள். அனைத்தும் தெளிவாகிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமித்ஷாவின் இந்த பேட்டி  அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  அதே நேரத்தில்   நடிகர் விஜயை  கூட்டணிக்குள் கொண்டு வரவும்  ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

அமித்ஷாவின் இந்த பேட்டி குறித்து இன்று புதுக்கோட்டை வந்த  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கேட்டபோது ,  எதுவாக இருந்தாலும் எடப்பாடி தான் இறுதி முடிவு எடுப்பார், திமுகவை எதிர்க்கும் கட்சிகளை எடப்பாடி ஒன்றிணைத்து வருகிறார். என்றார்.

error: Content is protected !!