கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டு மகாதானபுரத்தில் சுமார் 400 ஆண்டுகால பழைமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 18 திருநாளுக்கு அடுத்த நாளில் ஆடி 19ம் தேதியன்று பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வேண்டுதல் நிறைவேற்றும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். வழக்கம் போல இந்த ஆண்டும் இன்று காலை தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
ஆடி மாதம் 1ம் தேதி முதல் விரதம் மேற்கொண்டு 18 நாட்கள் கழித்து இன்று நடைபெற்ற இந்த நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிக்காக ஆண்கள், பெண்கள் என 800க்கும் மேற்பட்டோர் காலை 6 மணியில் இருந்து கோவில் முன்பு வரிசையாக அமர்ந்து காத்திருந்தனர்.
காலை 9.10 மணியளவில் கோவில் பாரம்பரிய பூசாரி மகாலட்சுமிக்கு அலங்கார அபிஷேகம் செய்த பின்பு மேள தாளம் முழங்க ஆணிகள் பொருத்தப்பட்ட பாத அணி மீது நின்று அருளோடு கொடிக்கம்பம் மீது தீபம் ஏற்றினார். இதை தொடர்ந்து அருளோடு அமர்ந்து இருந்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தார். அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டனர்.
சென்னை, கோவை, திருச்சி, பெங்களூரு, தேனி, மதுரை, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல பகுதியில் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் குடிபாட்டு மக்கள் விழாவில் கலந்து கொண்டனர். 100க்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.