தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில், சின்னமனை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் விஷ்ணு (20) முன்னாள் மாணவர் ஆவார். இவர் தற்போது மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தீபாவளி பண்டிகைகாக விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை மாலை முதல் விஷ்ணுவை காணவில்லை. இந்நிலையில் இன்று காலை அவர் படித்த மல்லிப்பட்டினம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். மேலும் பள்ளி சுவற்றில் என் சாவுக்கு காரணம் பாபு என எழுதப்பட்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த வந்த காவல்துறையினர் விஷ்ணு உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது கொலையா? தற்கொலையா ? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சுவற்றில் எனது சாவுக்கு காரணம் பாபு என்று எழுதப்பட்டிருந்த நிலையில், பாபு என்பவர் அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் மாணவர் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே பள்ளியில் தற்காலிக ஆசிரியர் வகுப்பறையில் குத்தி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

