கரூர் அருகே கருப்பண்ணசாமி கோவிலில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுடைய உபய பொருட்களை மட்டும் அறங்காவலர் ஏற்றுக் கொள்ள மறுப்பதாக கூறி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கரூர் மாவட்டம், கடவூர் வட்டத்திற்கு உட்பட்ட சிங்கம்பட்டி கிராமத்தில் வந்தவழி கருப்பண்ணசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் கடைசி வியாழக்கிழமை அன்று கோவில் தர்மகர்த்தா கிராமம் முழுவதும் உள்ள அனைத்து சமூகத்தை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து நன்கொடை பெற்று பூஜைகள் செய்வது வழக்கம். ஆனால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தங்களிடமிருந்து எந்த உபய பொருட்களும் பெறாமல் எங்களை இழிவு படுத்தியும், கேவலப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி அனைத்து சமுதாயத்தை சார்ந்தவர்களின் உபயத்தாலும் ஒன்றிணைந்து, அனைவரது ஒத்துழைப்பாலும், உபயத்தாலும் பூஜைகள் நடைபெற வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார். துணை ஆணையர் சில கட்டளைகளுடன் ஊர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தர்மகர்த்தா பூஜை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
ஆனால், தர்மகர்த்தா நாங்கள் கொடுத்த எந்த உபயப் பொருளையும் வாங்க மாட்டேன் என தன் கைப்பட எழுதி கொடுத்தது மட்டுமல்லாமல், ஜாதி பெயரைச் சொல்லி இழிவாக பேசி உதாசீனப்படுத்துவதாக கூறி தங்களுக்கு சுயமரியாதையுடன் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். இன்று மாலைக்குள் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் நாளை அரசு சார்பில் வழங்கப்பட்ட ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்து விட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்