பீகாரில் 85 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் ஆணையக் குழு அடுத்த வாரம் பீகாருக்கு வருகை தர உள்ளதால், அதன்பிறகு தேர்தலுக்கான கவுன்டவுன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 2 முதல் 19ம் தேதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, வாக்காளர் பட்டியலைத் திருத்தும் சிறப்பு முகாம்களும் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, எல்லைப் பகுதிகளில் 393 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே, முக்கிய கட்சிகள் தங்களது கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், பாஜக மற்றும் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சிகள் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. மறுபுறம், ‘இந்தியா’ கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள் தேர்தல் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பீகாரில் தனது செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்தும் முயற்சிகளில் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, சுமார் 85 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நாளை (செப் 24) பாட்னாவில் நடைபெற உள்ளது. கடந்த 1940ம் ஆண்டுக்குப் பிறகு பீகாரில் நடைபெறும் முதல் காரிய கமிட்டி கூட்டம் இதுவாகும்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ பீகாரில் வெற்றிப் பெற்றதால், இங்கு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காரிய கமிட்டியின் உறுப்பினர்கள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பீகார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லாவரு கூறுகையில், ‘பீகார் மீண்டும் தேசிய அரசியலின் மையமாக மாறியுள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் மற்றும் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்’ என்று கூறினார். இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, வரும் 25ம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பாட்னாவில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.