Skip to content

திருச்சியில் கொடூரம்: 2 நாய்க்குட்டிகளை சுவரில் வீசிக் கொன்ற பெண் கைது

திருச்சி கம்பரசம்பேட்டை வெள்ளாந்தெருவை சேர்ந்தவர் ஜெய்கணேஷ். பாய்லர் ஆலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி மிஸ்ரா(28). இவரது எதிர்வீட்டை சேர்ந்தவர் கணேஷ் பிரபு. இவரது மனைவி புவனேஸ்வரி(30). இவருக்கும், மீனாட்சி மிஸ்ராவுக்கும கடந்த ஓராண்டாக வாசலில் டூவீலர் நிறுத்துவது, வாசலை கூட்டி சுத்தம் செய்வது, தண்ணீர் தெளிப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி காலை வாசலை சுத்தம் செய்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், புவனேஸ்வரி கல்லை எடுத்து மீனாட்சி மிஸ்ராவின் 3 வயது மகனை தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த சிறுவனை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து மீனாட்சி மிஸ்ரா ஆட்டோவில் வீட்டுக்கு வந்தார். அப்போது வாசலில் புவனேஸ்வரி பராமரித்து வந்த பிறந்து சில நாட்களே ஆன 2 தெரு நாய்க்குட்டிகள் துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டே மீனாட்சி மிஸ்ரா அருகில் ஓடி வந்தன. ஏற்கனவே புவனேஸ்வரி மீது ஆத்திரத்தில் இருந்த மீனாட்சி மிஸ்ரா வாயில்லாத ஜீவன் என்றும் பார்க்காமல் 2 நாய் குட்டிகளையும் அடுத்தடுத்து தூக்கி சுவரில் வீசினார். இதில் நாய்குட்டிகள் பரிதாபமாக துடிதுடித்து இறந்தன. பின்னர் அவர் வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

அவர் நாய்குட்டிகளை சுவரில் வீசி கொடூரமாக கொன்ற வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு விலங்கின ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஜீயுபுரம் எஸ்ஐ ராஜ்குமார் வழக்கு பதிந்து மீனாட்சி மிஸ்ராவை நேற்று கைது செய்தனர். இதேபோல் மகனை தாக்கியதாக கணேஷ் பிரபு அளித்த புகாரின்பேரில் புவனேஸ்வரியையும் போலீசார் கைது செய்தனர். இருவரையும் ஜே.எம். 3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெண்கள் சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!