பரந்து விரிந்த இந்த உலகம் ஒரு செல்போனுக்குள் அடங்கி விட்டது. அறிவியல் வளர்ச்சியின் காரணமாக எல்லாம் டிஜிட்டல் மயமாகி விட்டது- வங்கிக்கு சென்று வரிசையில் நின்று பணம் எடுப்பதும், பணம் செலுத்துவதும் இன்று டிஜிட்டல் யுகத்திற்குள் வந்து விட்டது. கடைவீதிகளுக்கு சென்று பொருட்கள் வாங்க பணத்தை எடுத்து செல்ல வேண்டியது இல்லை. வங்கியில் நம் கணக்கில் பணம் இருந்தால், செல்போன் மூலமே பொருட்கள் வாங்கும் நிலை வந்து விட்டது. பெரிய வர்த்தக நிறுவனங்கள் முதல், சாதாரண சாலைேயோர கடைகள் வரை டிஜிட்டல் மயமாகி விட்டது. பஸ்களில் கூட டிக்கெட் எடுப்பது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளது.
இதனால் கால விரயம் தவிர்க்கப்படுவதுடன், சில்லறைத்தட்டுபாடு இல்லை, பணம் தொலைந்து விடுமோ என்ற பயம் இல்லை. இப்படி அநேக நன்மைகள் உண்டு. டிஜிட்டல் மயத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக பிச்சை எடுப்பவர்கள் கூட கியூ ஆர் கோடு அட்டையை வைத்துக்கொண்டு பிச்சை எடுக்கும் நிலை வந்து விட்டது. வழக்கமாக பிச்சைக்காரர்கள் பணம் கேட்டால், காசு இல்லை, சில்லறை இல்லை என்று சாக்குபோக்கு சொல்பவர்கள் கூட இனி தப்பிக்க முடியாது.
பிச்சைக்காரர்கள் கியூ ஆர் கோடு அட்டையை காட்டுகிறார்கள். அந்த அளவு பிச்சைக்காரர்களும் அறிவியல் உலகில் அப் டேட் ஆகி விட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புத்துகோவில் பகுதியில் 60 வயது முதியவர் ஒருவர் இப்படி கியூ ஆர் கோடு அட்டையை காட்டி பிச்சை எடுக்கிறார். வாணியம்பாடி கணவாய்புதூர் பகுதியை சேர்ந்த அந்த முதியவருக்கு 3 வங்கிகளில் கணக்கு உள்ளது. அந்த வங்கிகளின் , ஏடிஎம் கார்டுகள் வைத்திருக்கிறார்.
கியூ ஆர் கோடு அட்டை மூலம் பிச்சை எடுக்கும் அவர், இது குறித்து கூறியதாவது: காலத்திற்கு ஏற்ப நாமும் மாறிவிட வேண்டியது தான். பெரும்பாலானவர்கள் பணம் இல்லை என்று தவிர்ப்பார்கள். இனி அப்படி சொல்ல முடியாது. ஆனாலும் மக்கள் அனைவரும் இன்னும் கியூ ஆர் கோடு அட்டை மூலம் பிச்சை செலுத்த தயாராகவில்லை. ஒரு சிலரே இந்த முறையில் பிச்சை போடுகிறார்கள். காலப்போக்கில் சரியாகி விடும் என்றார்.
கியூ ஆர் கோடு மூலம் பிச்சை எடுக்கும் இந்த முதியவர் பற்றிய செய்திகள் சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.