கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள பீரசந்திரா கிராமத்தை சேர்ந்தவர் கங்குபாய்( 35). இவர் குடும்ப பிரச்சினை வழக்கின் விசாரணைக்காக மாவட்ட கோர்ட்டுக்கு சென்றிருந்தார். அங்குள்ள ஒரு கழிவறைக்கு சென்ற கங்குபாய், கழிவறையை விட்டு வெளியே வந்தபோது, திடீரென ஒரு நாய் பாய்ந்து சென்று அவரை கடித்து குதறியது. நாயிடம் இருந்த தப்பிக்க அந்த பெண் கடுமையாக போராடினார். ஆனால் அந்த நாய் விடாமல் கங்குபாயின் முகத்தில் பலமாக கடித்தது. அவரது கூச்சல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று நாயை அடித்து விரட்டினர். நாய் கடித்ததில் கங்குபாயின் முகம் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சிலர், பெண்ணை கடித்த நாயை விரட்டிச் சென்று அடித்துக் கொன்றனர். காயமடைந்த பெண் உயர் சிகிச்சைக்காக பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தெருநாய்களை அப்புறப்படுத்துவது தொடர்பான விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ள நிலையில், கோர்ட்டு வளாகத்திற்குள் ஒரு நாய் புகுந்து பெண்ணை கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல், கர்நாடக மாநிலத்தில் உள்ள மாவினா கோட்டே மற்றும் சாஷ்வேஹள்ளி ஆகிய கிராமங்களில் அண்மையில் தெருநாய்கள் கடித்து 4 குழந்தைகள் மற்றும் ஒரு முதியவர் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.