தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே தெற்குப் பாளையப்பட்டியில் ‘தாழவாரி’ எனப்படும் பகுதியில் ஈமத் தாழிகள் போன்று காணப்படுகிறது என்று பாளையப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ரெ. கமலதாசன் தகவல் அளித்தார். இதன் பேரில் கல்வெட்டு ஆய்வாளர் மன்னர் சரபோசி அரசு கல்லூரி, தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் சோ. கண்ணதாசன், பொந்தியாக்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் கோ. தில்லைகோவிந்தராசன், வக்கீல் வே. ஜீவக்குமார், பணி நிறைவுப் பெற்ற சரஸ்வதி மகால்நூலக விற்பனை எழுத்தர் மூ. நேரு, முனைவர் பட்ட ஆய்வாளர் பெ.வீரமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர் தெற்கு பாளையப்பட்டியில் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் ஆய்வாளர்கள் தரப்பில் கூறியதாவது; பழங்கால தமிழகத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்து, மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதைகலன்களே ஈமத் தாழிகள் ஆகும். இது சவ அடக்க முறையாகும். இந்த ஈமத்தாழிகளுக்கு முதுமக்கள் தாழி, முதுமக்கள் சாடி, ஈமப் பேழை, மதமதக்கா பானை என்ற வேறு பெயர்களும் உண்டு. இவ்வடக்க முறை சங்க காலந்தொட்டே இருந்து வருவதைக் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என்னும் சோழ மன்னன் இறந்த போது, ஐயூர் முடவனார் பாடிய பாடல் (புறம் – 228) முதுமக்கள் தாழிப் பற்றிக் குறிப்பிட்டிருக்கக் காணலாம்.
இவ்வாறே, ‘’தாழியுடன் கவிப்போர்’’என மணிமேகலையும் இவ்வழக்கம் குறித்துச் சுட்டியிருக்கிறது.
அந்த வகையில் சங்க காலத்தைச் சார்ந்த ஈமத் தாழிகள் தெற்குப் பாளையப் பட்டியில், ஈமத்தாழியை ஒட்டி ஓடும் வாரி என்னும் பொருளில் தாழிவாரி என வழங்கப்பட்டுக் காலப்போக்கில் தாழவாரி என மருவி உள்ளது. இப்பகுதியில் 54 ஏக்கர் பரப்பளவில் காணப்படுகின்றன. இதுவே சோழ மண்டலத்துள் கிடைக்கப்பெறுகின்ற ஈமக் காடுகளுள் பரப்பளவில் மிகப் பெரிய அளவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்பகுதி மக்கள் பாலை மரங்கள் மிகுந்து காணப்பட்டதால் பாளையப்பட்டியெனப் பெயர் பெற்றதாகக் கூறி வந்தாலும், படைவீர்ர்கள் தங்கியிருக்கும் இடமே பாளையம் எனப்படும். அப்படி தங்கியிருந்த இடத்தில் போர் செய்து இறந்த வீர்ர்களுக்காக, எடுக்கப்பெற்ற ஈமத் தாழிகளாக இருந்திருக்கலாம். இதன்காரணமாகவே இவ்வூரைப் ‘’பாளையப்பட்டி’’என்று அழைத்திருக்கலாம்.
இங்குக் காணப்படும் அகன்ற வாய்களைக் கொண்ட தாழிகளின் கழுத்துப் பகுதியில் சங்கிலி கோர்த்தது போன்ற அழகிய வேலைபாடுகளைக் கொண்டதாக 25க்கும் மேற்பட்ட தாழிகள் மண்ணரிப்பினால் சிதைந்து சிதறுண்டு வெளியே தெரிய வந்துள்ளது. இவற்றுள் இரும்பாலான பொருட்களின் எச்சங்களும் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. இங்குக் காணப்படும் சிறிய அளவிலான ஈமத் தாழிகள் சிலவற்றுள் ஒன்றுக்கு மேற்பட்ட மண் கலயங்கள் காணப்பெறுவதால், போரில் இறந்தவர்களின் சடலத்தை எரியூட்டி, எஞ்சிய சாம்பலைச் சிறிய மண் கலயங்களில் இட்டுப் புதைத்திருக்க வேண்டும் என்பது தெரிய வருகின்றது.
மேலும் இவ்வளவு பெரிய அளவிலான ஈமக்காடு இருக்கும் போது, இந்த இடத்தின் அருகிலேயே அம்மக்களின் வாழ்விடப் பகுதியும் இருக்க வேண்டுமே என்ற விசாரித்த போது இவ்வூர்ச் சிவன் கோவில் அருகே மேடான நிலங்களை உழும் போது பானையோடுகள் மேலே வெளிவருகின்றன. அந்த இடம் கூட மக்கள் வாழ்விடப் பகுதியாக இருந்து இருக்கலாம் என்று தகவல்கள் கிடைத்தது. எனவே இதன் அடிப்படையில் ஈமக் காட்டினையும், வாழ்விடப் பகுதியாகக் கருதப்படும் இடத்தினையும், தமிழ்ப் பல்கலைக் கழகத் தொல்லியல் துறையோ, தமிழ் நாடு அரசு தொல்லியல் துறையோ ஆய்வு மேற் கொண்டால், சோழ மண்டலத்துச் சங்க காலத் தொன்மை வரலாற்றையும், அக்கால மக்களின் வாழ்வியலையும், பண்பாட்டினையும் வெளிக்கொணரலாம். மேலும் இப்பகுதி மிகுந்த பண்பாட்டுத் தரவுகளைக் கொண்டதாகத் தமிழகத்தில் மற்றொருகீழடியாக விளங்கிடவும் வாய்ப்புண்டு. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.