Skip to content

வீட்டிற்குள் புகுந்து யானை வெறியாட்டம்: தந்தை மற்றும் மகள்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

ஜார்க்கண்ட் மாநிலம் கோயில்கேரா பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது இரண்டு மகள்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் கோயில்கேரா வனப்பகுதியில் குந்த்ரா என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் மரத்தால் அமைக்கப்பட்ட வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று நள்ளிரவில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று திடீரென குந்த்ராவின் வீட்டிற்குள் புகுந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த யானை வீட்டை அடித்து நொறுக்கியதுடன், அங்கிருந்த குந்த்ரா மற்றும் அவரது இரண்டு மகள்களை ஆக்ரோஷமாக மிதித்துக் கொன்றது.

யானையின் இந்த கோரத் தாக்குதலில் இருந்து குந்த்ராவின் மனைவி அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும், மற்றொரு மகள் யானை தாக்கியதில் படுகாயமடைந்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் அந்தப் பகுதியில் காட்டு யானைகள் தாக்கி மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வனப்பகுதியையொட்டி வசிக்கும் மக்கள் தொடர் யானை தாக்குதல்களால் மிகுந்த அச்சத்துடன் வசித்து வருகின்றனர். வனத்துறையினர் யானைகளை அடர்ந்த காட்டிற்குள் விரட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!