சாத்தூர் அருகே கங்கர் செவல்பட்டி கிராமத்தில் மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான மினி நாக்பூர் உரிமம் பெற்ற திவ்யா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 30 மேற்பட்ட அறைகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு உற்பத்தி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்போது பேன்சீராக பட்டாசு தயாரிக்க தேவையான ரசாயன மூலப் பொருட்களை கலவை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு அறைகள் தரைமட்டமானது. இதில் ரசாயன மூலப் பொருட்களை அளவை செய்து கொண்டிருந்த கண்டியாபுரம் இலங்கை மறுவாழ்வு முகாமை சேர்ந்த கௌரி(50)என்ற பெண் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தார். மேலும் காளிமுத்து (45), அவரது மனைவி மகேஸ்வரி (40), குமரேசன் (30), மாரியம்மாள் (40), மேகலை (21) சிவரஞ்சனி (39), சுப்புலட்சுமி (55), ஜெயலட்சுமி (55) ஆகிய 8 தொழிலாளர்கள் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 100 சதவீத தீக்காயமடைந்த காளிமுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மூலமாக தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். வெடி விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.