மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணல்மேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட கிழாய் கிராமம் வடக்கு தெருவில் வசித்து வந்தவர் ராஜா (60) விவசாயக் கூலி தொழிலாளியான இவர் நேற்று மதியம் தெரு கடைசியில் உள்ள வயல்வெளியில் ஆடு மேய்க்க சென்றுள்ளார். காற்று மழையால் தாழ்வாக இருந்த மின்கம்பி வயலில் தரையில் இருந்து நான்கடி உயரத்தில் மிகவும் தாழ்வாக தொங்கி கொண்டிருந்தது. மின்கம்பி இருப்பது தெரியாமல் கடக்க முயன்றபோது ராஜாவின் கழுத்தில் மின்கம்பி பட்டுள்ளது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த மணல்மேடு காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜாவின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வயல்வெளி பகுதியில் மின் கம்பங்கள் சாய்ந்தும் தாழ்வாக தொங்கி வரும் மின்சார கம்பிகளை சீரமைத்து இது போன்று நடைபெறும் உயிரிழப்பு சம்பவங்களை தடுக்க மின்சாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
