உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் 30 வயது பெண்ணின் கல்லீரலுக்குள் 3 மாத குழந்தை இருப்பது ஸ்கேன் மூலம் தெரியவந்தது. அந்த பெண்ணுக்கு பல நாட்களாக கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி இருந்து வந்தது. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்பட்டது. ஆனால் அந்த பெண்ணின் கர்ப்பபை காலியாக இருந்தது. பின்னர் மருத்துவர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்தனர். அப்போது கல்லீரலின் வலது பக்கத்தில் கரு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 12 வார கால அந்த கருவுக்கு வழக்கமான இதயத் துடிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கல்லீரலில்இருந்து வரும் ரத்த நாளங்கள் கருவுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இந்தியாவில் இதுபோன்ற வினோத கரு இப்போது தான் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் உலகில் இதுபோன்ற எட்டு கருக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த அரிதான நிலையை மருத்துவ உலகம் இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம் என்று அழைக்கிறது. இதுபோன்ற கர்ப்பம் தாய்க்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால், அது கல்லீரல் சிதைவு அல்லது ரத்தப்போக்குக்கு வழிவகுக்கும். அந்தப் பெண் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். சிக்கலான அறுவை சிகிச்சையை தொடங்க மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.