மதுரை, சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்குள் புகுந்து மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது செய்யப்பட்டார். மதுரை, சத்திரப்பட்டி காவல் நிலையத்தை கொலை வழக்கில் தொடர்புடைய பிரபாகரன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சென்று மதுபோதையில், தலைமைக் காவலர் மீது தாக்குதல் நடத்தியதோடு, அங்கிருந்த உபகரணங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பியோடியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் நொறுக்கப்பட்ட காவல் நிலையத்தை பார்வையிடுவதற்காக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போது அவரது காரை வழிமறித்த காவல்துறை, பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தினர். போலீசார் தடுத்து நிறுத்தியதைக் கண்டித்து ஆர்.பி.உதயகுமார் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவரை போலீசார் கைது செய்தனர்.
