அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் கலியபெருமாள்(50). இவர் கடந்த 2007-ம் ஆண்டு விருத்தாசலத்திலிருந்து ஜெயங்கொண்டம் வழியாக கும்பகோணம் செல்லும் விழுப்புரம் கோட்ட அரசு பேருந்தில் ஆண்டிமடத்தில் ஏறி, தனது ஊருக்கு சென்றுள்ளார். ஜெயங்கொண்டம் நோக்கி சென்றபேருந்து, மகிமைபுரம் அருகே எதிரே வந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கலியபெருமாள் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு அதிக செலவானதால், ஜெயங்கொண்டம் சார்பு
நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கு 2023-ம் ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, நிதிபதி லதா ரூ.5,06,000 இழப்பீடு வழங்க விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டார். இது நாள் வரை இழப்பீடு வழங்காத நிலையில், கலியபெருமாள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதையடுத்து விழுப்புரம் கோட்ட பேருந்து ஒன்றினை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட விருத்தாச்சலத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் பேருந்து, ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திற்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவின் பேரில், பணியாளர் இந்துமதி பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் முன்பு நிறுத்தினர்.
