தமிழ்நாட்டின் 4 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இடங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக அரசு நியமித்தது. அதன்படி, 1. டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின்சார வாரியம், ககன்தீப் சிங் பேடி, ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தீரஜ் குமார், ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, பெ. அமுதா, ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆகியோர் அரசு செய்தித்தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
அரசு அதிகாரிகள் அரசின் செய்திதொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக ஆதரவாளரான வழக்கறிஞர் சத்யகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட், தமிழ்நாட்டின் 4 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. அத்துடன் மனுதாரரான வழக்கறிஞர் சத்யகுமாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.