குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள குஜ்செல் என்ற இடத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் சரியாக 1. 39 மணிக்கு ஏர் இந்தியா விமானம் 23வது ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டது. அதில் 230 பயணிகள் 10 விமான ஊழியர்கள், 2 பைலட்கள் என மொத்தம் 242 பேர் இருந்தனர்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மெகானி என்ற இடத்தில் சென்றபோது விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு அவசர அழைப்பு(may day call) விடுக்கப்பட்டது. ஆனால் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனுப்பிய தகவல் விமானிக்கு கிடைக்கவில்லை. அதற்குள் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
கண் இமைக்கும் நேரத்தில் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது. விமானத்தில் வெளிநாட்டு பயணிகளும் இருந்தனர். குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் அதில் பயணித்ததாக கூறப்படுகிறது.அவரது கதி என்ன வென்று தெரியவில்லை.
விமானத்தின் தலைமை பைலட்டாக இருந்தவர் சுமீத் சபர்பால், இவர் 8200 மணி நேரம் விமானத்தை இயக்கியவர். இணை விமானியாக இருந்தவர் கிளைவ் குந்தர், 1100 மணி நேரம் விமானத்தை இயக்கியவா். இவர்கள் இருவரும் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள்.
விமானம் லண்டன் அருகே உள்ள கேட்விக் என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. இங்கிலாந்தை சேர்ந்த 52 பயணிகள் இதில் பயணித்தனர்.
விபத்தை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் இருந்து அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டது. அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. விமானத்தில் பயணித்த பலர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்ட்டனர். அதே நேரத்தில் 30 சடலங்களும் மீட்கப்பட்டு மருதூதுவமனைக்கு கொண்டு வரப்பட்டது. மீட்பு பணியில்ராணுவமும் ஈடுபட்டுள்ளது.
போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள், மருத்துவ சிகிச்சை பணிகள் நடந்து வருவதாக முதல்வர் பூபேந்தர் பட்டேல் தெரிவித்தார். விமானத்தின் இன்ஜின் செயல் இழந்ததால் இந்த விபத்து நடந்ததாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது.
விபத்து குறித்து பிரதமர் மோடி , குஜராத் முதல்வரிடம் கேட்டறிந்தார். விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அங்கு விரைந்துள்ளார். விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787 ரகத்தை சேர்ந்தது. விபத்து குறித்து விசாரிக்க விமான ஆணைய உயர்மட்ட அதிகாரிகள் அகமதாபாத் விரைந்தனர். அமித்ஷா குஜராத் விரைந்தார்.
விமானம் விழுந்த பகுதி குடியிருப்பு பகுதியாகும். விமானம் 825 அடி உயரத்தில் இருந்து விழுந்துள்ளது.
