ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த சாவித்திரி(53), தனது குலதெய்வக் கோயில் வழிபாட்டிற்காக உறவினர்கள் 30 பேருடன் வேனில் சேலம் நோக்கிப் புறப்பட்டார். நேற்று அதிகாலை 4 மணியளவில் கிருஷ்ணகிரி – சேலம் பைபாஸ் சாலையில், தருமபுரி தடங்கம் நீதிமன்றம் அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக வேன் நிறுத்தப்பட்டது.
அப்போது, ஜவுளி லோடு ஏற்றிக்கொண்டு பின்னால் வந்த லாரி ஒன்று, திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது பயங்கரமாக மோதிச் சாலையில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் வேன் முற்றிலும் நொறுங்கியது. இதில் வேனில் இருந்த சாவித்திரி மற்றும் டிரைவர் குமரேசன்(34) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மேலும், வேனில் இருந்த தருண்(15), கண்ணு(42), மாதிரை(39) ஆகிய மூன்று பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. லாரியில் வந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

