மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் பேருந்து நிலையம் அருகே இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மன்மதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு சொந்தமாக கடை வீதியில் கடைகள் வணிக வளாகங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் அங்கு உள்ள தனியார் பேக்கரி உரிமையாளர் கண்ணன் என்பவர் வாடகை நிலுவைத் தொகை 12 லட்சத்திற்கு மேல் பாக்கியுள்ளதாக கூறி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கண்ணன் இடத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் கண்ணன் கடையை காலி செய்ய மறுத்தார். இதனால் பிரச்னை ஏற்பட்டு ஆர்டிஓ விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று இந்து சமயஅறநிலையத்துறை துணை ஆணையர் ராணி தலைமையில் ஆலய செயல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பிரச்சனைக்குரிய கடையை சீல் வைக்க முயற்சி செய்தனர்.
அப்போது அடிமனைபயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இந்த பிரச்சனை தொடர்பாக ஆர்டிஓ விசாரணையில் இருக்கும்போது எப்படி சீல் வைக்கலாம் என்று அதிகாரிகளை சுற்றி வளைத்து கேள்வி எழுப்பினர். வணிகர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கடைக்காரருக்கு ஆதரவாக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் கைகலப்பு, அடிதடி ஏற்பட்டது.
அப்போது அங்கு வணிகர்கள் பெருமளவில் திரண்டு, நாற்காலிகளை எடுத்து அதிகாரிகள் மேல் வீசினர். சாலைமறியலிலும் ஈடுபட்டனர். போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். தொடர்ந்து குத்தாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.