அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, 17 மணி நேரம் டார்ச்சர் செய்யப்பட்டதால், அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் வழக்கறிஞர் கண்ணதாசன் இன்று காலை 11.20 மணி அளவில் ஆஸ்பத்திரியில் சந்தித்தார்.
அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் அவர் விசாரித்தார். செந்தில்பாலாஜியிடமும் உடல் நலம் குறித்து அமலாக்கத்துறையினர் எப்படி நடத்தினார்கள் என்பது குறித்தும் விசாரித்தார். கைது செய்தபோது அமலாக்கத்துறையினர் எப்படி நடந்து கொண்டார்கள். மனித உரிமைகள் மீறப்பட்டதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் வழக்கறிஞர் கண்ணதாசன் கூறியதாவது: அமைச்சர் தரப்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவைத் தொடர்ந்து அவரை சந்திக்க மனித உரிமை ஆணைய உறுப்பினர் என்ற முறையில் வந்தேன். அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலையில் காயம் இருப்பதாக அவர் கூறினார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னை கடுமையாக நடத்தினர். தரதரவென இழுத்து வந்தனர். இதனால் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறினார். நெஞ்சுவலி இருப்பதால் அவரால் சரியாக பேசமுடியவில்லை. சோர்வாக காணப்பட்டார்.
மனிதஉரிமை ஆணையம் தானாக முன்வந்தும் மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து விசாரிக்கலாம். புகார்களின் அடிப்படையிலும் விசாரிக்கலாம். இங்கு புகார் வந்ததால் விசாரிக்க வந்தேன். மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.