திருச்சி சோமரசம்பேட்டை குமார வயலூர் பகுதியைச் சேர்ந்தவர் வைரவேல்(33 )கூலி தொழிலாளி.மதுவுக்கு அடிமையானவர். இவருக்கு ரேவதி என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 10ம் தேதி மனைவி , வைரவேலிடம் ரூ. 200 பணத்தை கொடுத்து
கறி வாங்கி வருமாறு கூறினார். அவரும் பணத்தை வாங்கிக் கொண்டு வெளியே சென்றார்.
பின்னர் வெகுநேரம் கழித்து வீடு திரும்பினார். ஆனால் கறி வாங்கவில்லை. கறி எடுக்க மனைவி கொடுத்த பணத்தில் மது அருந்தியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரேவதி கணவரை கண்டித்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் வாழ்க்கையில் விரக்தி அடைந்த வைரவேல் யாரும் எதிர்பாராத வகையில் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பின்னர் அலறி துடித்து சுருண்டு விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கே டாக்டர்கள் கடந்த ஐந்து நாட்களாக தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் வைரவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரேவதி கொடுத்த புகாரின் அடிப்படையில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

